

ராணிப்பேட்டை ,
அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள காப்புக்காட்டில் மான்கள், காட்டுப்பன்றிகள், காட்டு முயல்கள், நரி உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கடும் கோடை காரணமாக காட்டுப்பகுதிகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், விலங்குகள் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று மேல்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற புள்ளிமான் ஒன்று, அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதைக் கண்ட பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மானின் உடலை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வந்த வனத்துறையினர், மானின் உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தனர்.
கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், வன உயிரினங்கள் கிராமப்புறங்களுக்கு வருவது மற்றும் இவ்வாறான விபத்துகளில் பலியாகுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் காடுகளில் தேவையான இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.