பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து நொறுக்கிய இலங்கை அரசு

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.
பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து நொறுக்கிய இலங்கை அரசு
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம் உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க படகுகளில் தமிழக மீனவர்கள் செல்கின்றனர். அவ்வாறு கடலில் மீன்பிடிக்கும் போது எல்லை தாண்டி சென்றதாக அவ்வப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.

அதன்படி தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில் தமிழக மீனவர்களின் 33 படகுகளை இலங்கை அரசு அரசுடைமை ஆக்கியுள்ளது.

மேலும் அந்த படகுகளை உடைத்து அகற்றவும் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே மயிலிட்டி துறைமுக பகுதிக்கு இந்த வாரத்தில் இலங்கை ஜனாதிபதி நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வருகையையொட்டி மயிலிட்டி துறைமுக பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.

இதையடுத்து அங்கு அரசுடைமையாக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 30-க்கும் மேற்பட்ட படகுகள் பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு வருகின்றன. பின்னர் படகுகளின் மரக்கட்டைகளை டிராக்டர்களில் ஏற்றி அச்சுவேலியில் உள்ள மரபேட்டை தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியானதை பார்த்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com