சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்; ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னையில் பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்; ரூ.5 லட்சம் நிதியுதவி
Published on

சென்னை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் சுபஸ்ரீ(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 12ந்தேதி பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பியபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைத்து இருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் மனோஜை கைது செய்தனர். பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் பேனர் அடித்து கொடுத்ததாக கோவிலம்பாக்கத்தில் உள்ள அச்சகத்துக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலிடம் விசாரணை நடத்த பள்ளிக்கரணை போலீசார் சென்றபோது அவர் வீட்டில் இல்லை என்று தெரியவந்தது. பேனர் வைத்த ஜெயகோபால் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தி.மு.க. சார்பில் சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சுபஸ்ரீ பெற்றேருக்கு ஆறுதல் கூறிய பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசும்பொழுது, சாலை விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் உண்மையிலேயே வருந்தத்தக்கது. அனுமதியின்றி மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுங்கட்சியினர் அதிகளவில் பேனர் வைக்கின்றனர்.

சட்டவிரோத பேனர் வைப்பதற்கு எதிராக தி.மு.க. நடவடிக்கை எடுக்கும். பேனர் கலாசாரமே இனி இருக்க கூடாது என்பது தி.மு.க.வின் நிலைப்பாடு என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com