அரசை குறை கூறுவதையே மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்; முதல் அமைச்சர் குற்றச்சாட்டு

அரசை குறை கூறுவதையே மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என்று முதல் அமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
அரசை குறை கூறுவதையே மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்; முதல் அமைச்சர் குற்றச்சாட்டு
Published on

திருச்சி,

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பிரிட்டோ. விவசாய பணிகளுக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இவரது சொந்த நிலத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு சரியாக மூடப்படாமல் விடப்பட்டது.

இந்நிலையில், கடந்த 25ந்தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் பிரிட்டோவின் 2 வயது மகனான சுஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். அவனை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்றன. எனினும், அரசின் பல்வேறு கட்ட முயற்சிகள் பலனின்றி சுஜித் இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்து விட்டான் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்தாவது நாளில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது. பின்பு முறைப்படி சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், குழந்தை சுஜித்தின் வீட்டிற்கு முதல் அமைச்சர் பழனிசாமி நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறி, சுஜித்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் சென்ற துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் சுஜித்தின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, கடந்த வெள்ளி கிழமை மாலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுஜித் விழுந்தவுடன் அதுபற்றிய தகவல் அறிந்து, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் மீட்பு பணியில் துரிதமுடன் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மக்கள் வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிகாரிகள் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளும், தனியார் நிறுவனத்தினரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர். என்.டி.ஆர்.எப்., எஸ்.டி.ஆர்.எப். ஆகியோரை வைத்து முயற்சி மேற்கொண்டோம்.

குழந்தையை உயிருடன் மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். எனினும் அது பலனளிக்கவில்லை என்று கூறினார்.

பின்னர், சுஜித் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும். அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும். குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு கட்சி சார்பில் ஆழ்ந்த வருத்தத்தினையும், வேதனையையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து அவர், அரசின் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு குழந்தையை மீட்க முடியவில்லை என தவறான தகவலை மு.க. ஸ்டாலின் கூறி விட்டு சென்றார். எந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எந்த அளவுக்கு அரசு செயல்பட்டது என ஊடகங்கள் அறியும். பொய்யான வதந்தியை பரப்பி, மக்களிடையே தவறான எண்ணம் ஏற்படுவதற்கான முயற்சியை அவர் மேற்கொள்கிறார்.

இதுபோன்ற தொழில்நுட்பத்துடன் இதற்கு முன்பு மீட்பு பணிகள் நடந்ததில்லை. மீட்பு பணிகள் குறித்த மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தவறானவை.

கடந்த 2009ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தேனியில் 6 வயது சிறுவன் இதுபோன்ற ஒரு நிகழ்வில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்து விட்டான். அப்போது இந்த அளவிற்கு மீட்பு பணிகள் நடைபெறவில்லை. தேனி நிகழ்வின் போது மு.க.ஸ்டாலின் அங்கு சென்றிருந்தாரா? அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டிருந்தார்களா? என கேள்வி எழுப்பினார்.

எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டுமென்று தவறான எண்ணத்துடன் செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com