

சென்னை
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலையை விண்ணைத்தொடும் அளவிற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உயர்த்திக் கொண்டே போவதற்கு தி.மு.க. சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இருந்ததை விட தற்போது கச்சா எண்ணெயின் சர்வதேச விலை ஒரு பேரலுக்கு 52 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ள நிலையில், அப்போது இருந்ததை விட 50 சதவீதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது, எங்கள் அரசின் நோக்கம் மக்கள் நலனே, என்று 2014-ல் நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.
இன்றைக்கு தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, மக்கள் தலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற சுமைதாங்கி பாறாங்கல்லை தூக்கி வைத்துள்ளது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு 11 முறை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்று அனுமதித்து, இன்றைக்கு பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 73.09 ரூபாயையும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 62.02 ரூபாயும் விற்கப்படும் சூழ்நிலை உருவாகி விட்டது.
மக்கள் துயரம்
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எவ்வித விலை குறைப்பும் மக்களை சென்று அடையாமல், கடந்த மூன்று வருடங்களாக ஆட்சி செய்து வருகிறது பா.ஜ.க. என்பதை காணும்போது, விவேகமாக அரசு நிர்வாகம் செய்வதை விட, விமர்சனம் செய்வது மட்டும் எங்களுக்கு எளிமையானது என்று பா.ஜ.க. செயல்படுவதாகவே அமைந்திருக்கிறது.
விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ அமைதியாக மக்கள் படும் வேதனைகளை வேடிக்கைப் பார்ப்பது கொடுமையான காட்சியாக இருக்கிறது. அதேநேரத்தில், மத்திய பா.ஜ.க. மந்திரி அல்போன்ஸ் பெட்ரோல் விலை உயர்வால் ஏழைகளுக்கு பாதிப்பு இல்லை. வாகனம் உள்ளவர்கள் யாரும் பட்டினி கிடப்பவர்கள் அல்ல என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியிருப்பது, மக்களின் துயரங்களைப் பற்றி மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மட்டுமல்ல, அந்த அரசின் கீழ் பணியாற்றும் அமைச்சர்களும் உணர்வதில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
தடுத்து நிறுத்த வேண்டும்
ஆகவே, மக்களை மிக மோசமாக பாதிக்கும் தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சமையல் எரி வாயு விலை ஏற்றத்தை தடுக்கவும் உடனடியாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்பாவி மக்களையும், அடித்தட்டு மக்களையும் வாட்டி வதைக்கும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிரந்தரமாக தடுத்து நிறுத்த, தினசரி விலை நிர்ணய கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்த கொள்கையை உடனடியாக திரும்பப் பெறவும், சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலைக்குறைப்பின் பயன்கள் சாதாரண மக்களுக்கு சென்றடையவும் பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.