

சென்னை,
மத்திய அரசு வரவிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான எண்ணிக்கையையும் சேர்க்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 1931-ம் ஆண்டிற்கு பிறகு இப்போது தான் முதல்முறையாக நாடு தழுவிய அளவில் முழுமையான சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து, அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறுகையில், ஒரு மாநில அரசாங்கம் தனது நலத்திட்டங்களுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நிலையை அறியவோ சாதி வாரியான ஆய்வு நடத்த சட்டப்படி இடம் இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக கூறினார்.
மேலும் பீகார் போன்ற பிற மாநிலங்கள் ஏற்கனவே சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திவிட்டதாகவும்.ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு காட்டுவதற்கு திமுகவிடம் எந்த சாதனையும் இல்லை என கூறினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மகன் உதயநிதி மற்றும் தங்கை கனிமொழி ஆகியோர் வீதி வீதியாக சென்று பொய் பிரச்சாரம் செய்வதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.