தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40, 46 மற்றும் 47-வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்று பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 40, 46 மற்றும் 47-வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,299 மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள், 191 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த விண்ணப்பங்கள், 164 கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்ந்த விண்ணப்பங்கள், 80 மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த விண்ணப்பங்கள், 69 எரிசக்தி துறை சார்ந்த விண்ணப்பங்கள், 72 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட மொத்தம் 1,991 விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி குறுகிய காலத்தில் விண்ணப்ப மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர் ரெக்சிலின், வட்டச் செயலாளர்கள் டென்சிங், லியோ ஜான்சன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பகுதி பிரதிநிதி மரியதாஸ், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர் அணி கமலி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சத்துணவின் தரம் குறித்து ஆய்வு:
தூத்துக்குடி காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்டு வரும் சத்துணவின் தரம் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமுவேல் ராஜதுரை, ஆசிரியர்கள் மற்றும் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.






