மாநிலங்களவை தேர்தல்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Published on

தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வைச் சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

இதனையடுத்து மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு இடத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது. அதில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 2-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பேரவை கூடுதல் செயலாளரிடம் கமல்ஹாசன் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களான வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வின்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகை, திருமாவளவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com