

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டனர். அவர்களை விடுதலை செய்வது என ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கொள்கை முடிவு எடுத்தார். தெளிவாக இந்திய அரசமைப்பு சட்டத்தின் 161-ம் பிரிவுப்படியே மாநில அரசுக்கு உள்ள பரந்த அதிகாரத்தை பயன்படுத்தி செயல்பட்டு இருந்தால், இத்தனை காலதாமதமும், தொடர் குழப்பங்களும், அதன் காரணமாக தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும் அவலமும் ஏற்பட்டிருக்கும் நிலை உருவாகி இருக்காது.
இதே அடிப்படையில் 1996-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் பிறந்தநாளையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்ட முன்னுதாரணமும் உண்டு என்ற சட்ட நிலையையும் எடுத்துக்காட்டி இந்த 7 பேரை மாநில அரசே விடுதலை செய்யலாம். அரசமைப்பு சட்ட உரிமைப்படியும், மாநில அரசின் உரிமைகளை முறைப்படி செயல்படுத்தியும் நல்ல முடிவுகளை எடுத்து, மனிதநேயத்தை நிலைநாட்ட முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.