கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தமிழ் மொழியை பயிற்றுவிக்க வேண்டும் - வைகோ அறிக்கை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தமிழ் மொழியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தமிழ் மொழியை பயிற்றுவிக்க வேண்டும் - வைகோ அறிக்கை
Published on

சென்னை,

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அதை வன்மையாக கண்டிப்பதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;-

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி அடைந்தால் மட்டுமே 6-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்பிற்குச் செல்ல முடியும் என்றும், சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

2014-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்தி, சமஸ்கிருத மொழித்திணிப்பில் தீவிரமாக இருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவனையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் உரிய அங்கீகாரத்தையும், சம வாய்ப்பையும் மத்திய அரசு அளிக்க வேண்டும். இல்லையேல், இந்திய ஒருமைப்பாடு என்பது கேள்விக்குறி ஆகும்.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112-ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க உரிய ஆசிரியர்களையும் நியமனம் செய்து, தாய் மொழிக் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் தேட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com