

திருச்சி,
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், அதிநவீன 'ஹோஸ்டைல் வெகிக்கிள் மிட்டிகேஷன்' (Hostile Vehicle Mitigation - HVM) பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பு, விமான நிலையத்தின் முக்கிய பாதுகாப்பு பகுதிகளுக்குள் அனுமதியின்றி அதிவேகமாக நுழைய முயறும் வாகனங்களை உடனடியாகத் தடுத்து, அவற்றை சம்பவ இடத்திலேயே முழுமையாக செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டதாகும்.
விமான நிலைய வளாகத்தில் பயணிகள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிநவீன தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிநவீனப் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் முறைப்படி தரைப்பகுதியில் நிறுவப்பட்டு, செயல்பாட்டுப் பயன்பாடு மற்றும் தினசரி கண்காணிப்பிற்காக திருச்சி மாநகரக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன என்று திருச்சி விமான நிலைய இயக்குநர் ஜி. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு அமைப்பின் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விரைவாகக் கட்டுப்படுத்தவும், அவசரகால சூழ்நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்பதால், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.