தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமான திட்டம்; விரைவில் செயல்படுத்த நடவடிக்கை: முதல்-அமைச்சர் விஜய்

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் மூலம் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முதல்-அமைச்சர் விஜய் கலந்துரையாடல்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சருடன் ஆலோசனை:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், HD ஹுண்டாய் நிறுவனத்தின் (HD Korea Shipbuilding & Offshore Engineering – HD KSOE) உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து கலந்துரையாடினர். தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட HD ஹுண்டாய் நிறுவனம், உலகின் மிகப் பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைப்பதற்காக இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய கப்பல் கட்டுமானத்தள திட்டத்தின் செயல்பாட்டு நிலைகள் குறித்து, இந்த நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமான திட்டம்:

இந்தியாவில் புதிதாக உருவாகவுள்ள இந்த கப்பல் கட்டுமான திட்டத்தில் சுமார் 38,000 கோடி ரூபாய் (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 15,000 நபர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும் துணைத் தொழில்கள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி மூலம் மாநிலத்தில், மேலும் பல வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

இந்த திட்டத்திற்காக, சிப்காட் (SIPCOT) மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் (VOCPA) ஆகியவற்றுக்கு இடையே National Shipbuilding & Heavy Industries Park Tamil Nadu Limited (NSHIPTN) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த கப்பல் கட்டுமானத் தொகுதியை நிறுவுவதற்கான முதல் கொள்கை அளவிலான (In-Principle) ஒப்புதலை, இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (Directorate General of Shipping) இருந்து இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், தூத்துக்குடியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நிறுவனத்தின் உறுதியான ஆர்வத்தையும் தெரிவித்தனர்.

அதிநவீன கப்பல் கட்டுமான திட்டம்; விரைவில் செயல்படுத்த நடவடிக்கை:

அப்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் தூத்துக்குடியில் விரைவாக செயல்படுத்தப்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றும், திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான நிர்வாக ஆதரவும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, HD ஹுண்டாய் நிறுவனத்தினர் கப்பல் கட்டும் தளத்தை விரைவில் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது தமிழக தொழில்துறை அமைச்சர் ச.கீர்த்தனா, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தா.கார்த்திகேயன், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சி.அ.ராமன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், ஹுண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு குழுத் தலைவர் சன்ஜூன் ஹோங் (Mr. Sunjoon Hong), உலகளாவிய வணிகக் குழு மூத்த மேலாளர் ஹோங் சியோல் கிம் (Mr. Hongcheol Kim), குழுத் தலைவர் கிவான் லீ (Mr. Kihwan Lee) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com