

சென்னை,
தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. தற்போது, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க WOMEN'S QUALITY EMPLOYMENT PLAN என்ற மாநில அளவிலான செயல் திட்டத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்த ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.
மாவட்ட வாரியாக எந்தெந்த துறைகளில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்? என்பதை கண்டறிய முடிவு செய்துள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வதில் உள்ள சவால்களை கண்டறிந்து களையவும், குழந்தை பராமரிப்புக்கு இடையே பெண்கள் வேலைக்குச் செல்வதில் உள்ள சவாலை கண்டறிந்து களையவும் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
குழந்தை பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் இதர சமூக காரணங்களையும் கண்டறிந்து களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் ஆலோசனை நிறுவனம் 6 வாரங்களுக்குள் ஆய்வு மற்றும் செயல்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.