விநாயகர் சிலைகள் கரைப்பு

ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 37 விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் கரைப்பு
Published on

ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 37 விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

சிறப்பு பூஜை

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. தினமும் காலை மாலை வேளைகளில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக நேற்று ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 37 விநாயகர் சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் அந்தந்த பகுதி இளைஞர்கள் மூலம் ஊர்வலமாக வழிவிடுமுருகன் கோவிலை வந்தடைந்தனர். அனைத்து விநாயகர் சிலைகளும் வந்து சேர்ந்த பின்னர் சிலைகளை கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன.

ஊர்வலம்

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மாநில வர்த்தக அணி செயலாளர் செந்தில்ராஜன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கதிரவன் உள்பட முக்கிய நிர்வாகிகள், இந்து அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விநாயகர் சிலைகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாது காப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நொச்சிவயல் ஊருணி பகுதியை அடைந்தன. அங்கு ஒவ்வொரு சிலைகளாக கரைக்கப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஏற்பாடு

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி நகராட்சி தலைவர் கார்மேகம் மேற்பார்வையில் ராமநாதபுரம் நகராட்சி சார்பில் நொச்சி ஊருணியில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலம் செல்லும் வழியில் தடை ஏற்படாத வகையில் சாலையோர மரக்கிளைகள் வெட்டப்பட்டது. உயரமான சிலைகள் மின் கம்பிகளில் உரசி விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஊர்வலம் சென்ற வழியில் மின் சப்ளை நிறுத்தப்பட்டது.

தடை

ஊர்வலத்தையொட்டி பல சாலைகளில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து இருந்ததால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com