

திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் சமணப் பெரும்பள்ளிகள், பள்ளிச் சந்தங்கள் தொடர்பான பல கல்வெட்டுகளும், சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்களும் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தர்மநாதபுரம் கிராமத்தை சேர்ந்த எட் வர்ட் பாக்கியராஜ் அளித்த தகவலின் அடிப்படையில் பெரம்பலூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன் திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் கள ஆய்வினை மேற்கொண்டார்.
அப்போது நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள வேம்படியான் கோவில் பகுதி மற்றும் அருகில் உள்ள புதூர் உத்தமனூரில் அய்யனார் கோவில் பகுதியில் பிற்சோழர் காலத்தை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலைகளை கண்டறிந்துள்ளார். இதுகுறித்து செல்வபாண்டியன் கூறுகையில், இந்த சிலைகள் கி.பி. 10-11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
வேம்படியான் கோவில் முகப்பில் சுவரோரமாக ஒரு சமணத் தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அய்யனார் கோவில் முகப்பில் வேப்ப மரத்தின் கீழ் ஒரு சமணத் தீர்த்தங்கரர் சிலை உள்ளது. லால்குடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சமணத் தீர்த்தங்கரர் சிலைகளில் இதுவே அளவில் பெரியதாகும் என்று கூறினார்.