இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கான பிசி.எம் தகுதி அரசாணை ரத்து: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்!

மதமாற்ற உரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும்.
இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கான பிசி.எம் தகுதி அரசாணை ரத்து: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்!
Published on

சென்னை,

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பிலிருந்து இஸ்லாமிற்கு மாறியவர்களுக்கு 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்' (BCM) சான்றிதழும், அதன்படியான இடஒதுக்கீடு பலன்களும் வழங்க வழிவகை செய்து, கடந்த திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 2024-ஆம் ஆண்டு அரசாணை எண் 31-ஐ, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பு சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் நீண்டகால உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும்.

சமூக நீதிக் கண்ணோட்டம்

மதமாற்றத்தின் மூலம் ஒருவருடைய ஆன்மீக நம்பிக்கை மாறலாமே தவிர, அவர் பிறப்பால் எதிர்கொண்ட சமூக மற்றும் கல்வி ரீதியிலான பின்தங்கிய நிலை ஒரே நாளில் மாறிவிடுவதில்லை. இந்த எதார்த்தமான சமூக நீதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் விரிவான பரிந்துரைகளின் பேரிலுமே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கமே சமூக, கல்வி பின்தங்கிய நிலையைப் போக்குவதுதான் என்பதை தாண்டி, மதக் கோட்பாடுகளை மட்டுமே பிரதானமாக வைத்து நீதிமன்றம் இந்த விவகாரத்தை அணுகியுள்ளது. இது, நீதிமன்றம் சமூக நீதிக் கண்ணோட்டத்தைக் கவனிக்கத் தவறியதையே காட்டுகிறது.

அடிப்படை உரிமை

மதமாற்ற உரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால், மதம் மாறிய ஒரே காரணத்திற்காக ஒருவர் அனுபவித்து வந்த இடஒதுக்கீட்டுப் பாதுகாப்பை பறிப்பது என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் சிவில் உரிமைகள் மற்றும் சமூக நீதி அரசியலின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உடனடியாக ஆஜராக வேண்டும் என நீதியரசர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில், அவர் நேரில் ஆஜராகி குறிப்பிட்ட இந்த அரசாணை குறித்து தெளிவாக நீதிமன்றத்தில் விளக்கிய போதும், நீதியரசர்கள் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளனர். சமூகநீதி நலன் சார்ந்த வழக்குகளில், அண்மை காலமாக நீதிமன்றங்களின் இத்தகைய மிகக் கடுமையான சட்ட பார்வைகளும், கோட்பாட்டு அணுகுமுறைகளும், எதார்த்தமான சமூகப் பின்னணிகளை விட, மாற்று பார்வைகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

மேல்முறையீடு

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு, சமூக நீதியை காக்கும் பொருட்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். சிறந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையையும், அரசாணை எண் 31-ன் சட்டப்பூர்வ தன்மையையும் நிலைநாட்ட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com