

அரியலூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த ஆங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி (வயது 50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அமராவதி அங்கன்வாடி மைய ஊழியராக வேலை பார்த்து வந்தார். கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், மற்றொரு மகனுடன் அமராவதி வசித்து வந்தார்.
அதே கிராமத்தில் பழனிசாமியின் அண்ணன் சின்னத்துரை என்பவரின் மகன் அசோகன் (38) வசித்து வந்தார். விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அமராவதி, அசோகனுக்கு சித்தி முறை ஆவார்.
இந்நிலையில் நேற்று மதியம் அமராவதி வீட்டிற்கு வந்த அசோகன், அமராவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரமடைந்த அவர், தான் வைத்திருந்த அரிவாளால் அமராவதியை சரமாரியாக கை, கழுத்து, முகம் என பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அமராவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அசோகன் அங்கிருந்து சென்றார்.
தகவல் அறிந்த போலீசார் அசோகன் வீட்டிற்கு சென்றனர். அங்கு அசோகன், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அசோகன் கடந்த 2013-ம் ஆண்டு முதல் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் காரணமில்லாமல் கோபப்படுவது, மனைவியை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்தே நேற்று அவர் அமராவதியை வெட்டிக்கொலை செய்ததும், பின்னர் போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதும், விசாரணையில் தெரியவந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.