

மதுரை,
மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நூல்களை வைக்கும், நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், தேவையான நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.