தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க நடவடிக்கை


தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க நடவடிக்கை
x

கூடுதல் வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் பணி விரைவில் தொடங்கும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 2024-ம் ஆண்டு நடந்தது. அப்போது 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுவாக வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சரிசமமாக இருப்பதில்லை. ஒரு வாக்குச்சாவடியில் 1,700 வாக்காளர்கள், மற்றொரு வாக்குச்சாவடியில் 900 என்பது போல் வாக்காளர்களின் எண்ணிக்கை பல இடங்களில் மாறுபட்டு உள்ளன.

தற்போது இந்த எண்ணிக்கையை ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்ற வீதத்தில் சரிசமமாக்குவதற்காக இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலுக்குள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களின் எண்ணிக்கையை மாற்றி அமைக்கும் நடவடிக்கையை நாங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக மேற்கொண்டு உள்ளோம். 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் என்ற வீதத்தில் வாக்குப்பதிவை நடத்தினோம்.

தற்போது நிரந்தரமாக இந்த எண்ணிக்கையை 1,200 என்று மாற்றி அமைக்க வேண்டும். எனவே அதைவிட கூடுதலாக வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் இருக்கும் அமைவிடங்களிலேயே கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என்று முடிவு செய்து உள்ளோம். அவற்றை அடையாளம் காண வேண்டும்.

பொதுவாக பள்ளிக்கூடங்கள், சமூகநலக்கூடங்களில்தான் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. அங்கு கூடுதலாக இருக்கும் அறைகளை பயன்படுத்தி வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என்று யோசித்து வருகிறோம். அந்த அமைவிடங்களில் கூடுதல் அறைகள் கிடைக்கவில்லை என்றால் அடுத்தடுத்த தெருக்களில் இருக்கும் பள்ளிகள் போன்ற வசதியான இடங்களை நாடுவோம்.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள தரை தளங்களில் வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அதற்கு அங்கு வசிக்கும் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் அது எளிதல்ல. யாரும் விரும்பி முன்வந்தால் அந்த வசதியை பயன்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். கூடுதல் வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் பணியை தேர்தல் கமிஷனின் அனுமதிக்கு பின்னர் விரைவில் தொடங்குவோம். இதன் மூலம் வாக்குப்பதிவு அன்று தேர்தல் அலுவலர்களுக்கு கூடுதல் சுமை நேரிடாது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story