கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாக திறக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு


கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாக திறக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 8 Oct 2025 1:25 PM IST (Updated: 8 Oct 2025 2:48 PM IST)
t-max-icont-min-icon

கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை பொங்கலுக்கு முன்பாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில், ராயபுரம் கல்மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்படவுள்ள "புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்" பூமி பூஜையில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடத்தில் உள்ள "முதல்வர் படைப்பகம்" முன்னேற்றப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களை அறிவுறுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த கால ஆட்சியாளர்களால் போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டது, பேருந்துகளின் எண்ணிக்கை, பயனாளிகளின் எண்ணிக்கையை திட்டமிடாமல் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் பணிகளை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பயணிகளுக்கான கழிப்பிடம், ஓட்டுநர்களுக்கான தங்குமிடம், கடைகள், உணவகங்கள், பூங்காக்கள், இணைப்புச் சாலைகள், மழைநீர் வடிகால்கள் என பல்வேறு கட்டமைப்புகளுடன் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையமாக மேம்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.20 கோடி வழங்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தென்னக ரெயில்வே பொது மேலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். 2026 ஜனவரி மாதம் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளார்.

ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு, ஜனவரி மாதத்தின் தொடக்கப் பகுதியிலேயே கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை திறந்து வைத்தால் பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இன்னும் சில தினங்களில் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். ஆகவே "கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை தை பொங்கலுக்கு முன்பாகவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசின் சார்பில் தென்னக ரெயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story