கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை- அமைச்சர் பாண்டியராஜன்

கீழடியில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை- அமைச்சர் பாண்டியராஜன்
Published on

கும்பகோணம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் மூன்று கட்டங்களாக நடந்த அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்த நிலையில் மொத்தம் 7818 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதனையடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 4-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் பண்டைய நாகரீகத்தைச் சேர்ந்த 5820 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் கட்ட அகழ்வாரய்ச்சி பணி தொடங்கப்பட்டது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகைப் பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதற்கான முயற்சியை மேற்கொள்வதாக தமிழ் பண்பாட்டுத்துறை துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதியளித்தார்.

இதனையடுத்து இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும், அருங்காட்சியகம் அமைப்பதற்காக 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com