பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளின் சேமிப்பு காலத்தை ஆய்வு செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் அலட்சியம் கூடாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.

கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.

எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com