பள்ளியில் சேமித்து வைத்திருந்த பழைய பாடப்புத்தகங்களை விற்பனை செய்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

கடமலைக்குண்டு அருகே பள்ளியில் சேமித்து வைத்திருந்த பழைய பாடப்புத்தகங்களை விற்பனை செய்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பள்ளியில் சேமித்து வைத்திருந்த பழைய பாடப்புத்தகங்களை விற்பனை செய்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
Published on

ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 48). இவர் கடமலைக்குண்டு அருகே காமராஜபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் கடந்த 4 ஆண்டுக்கான முன்னாள் மாணவர்களின் பழைய பாடப்புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. சுமார் 250 கிலோ எடையுள்ள இந்த பழைய பாடப்புத்தகங்களை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் தலைமையாசிரியை ஈஸ்வரி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலாவதி, தலைமையாசிரியை ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் பாடப்புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குபவருக்கு விற்பனை செய்ததை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார். இதையடுத்து முறைகேடாக அதிகாரிகள் அனுமதியின்றி பள்ளிக்கு சொந்தமான பழைய பாடப்புத்தகங்களை விற்பனை செய்த ஈஸ்வரியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com