அம்பத்தூர் பாடி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
அம்பத்தூர் பாடி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
Published on

சென்னை,

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பத்தூர் பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடி பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்களுடன் இன்று (08.09.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் அம்பத்தூர் மண்டலம், கொரட்டூர் கிழக்கு அவென்யூவில் தொடங்கும் இந்த மழைநீர் வடிகால் பணியானது 2.50 கிலோ மீட்டர் நீளத்தில் சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை, பாடி மேம்பாலம் பகுதி வழியாக அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் சென்றடைகிறது.

இதில் 1.90 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணி முடிக்கப்பட்டுள்ளது. 600 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாடி மேம்பாலம் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு, பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் எம்.பி.தணிகைவேலன், மேற்பார்வைப் பொறியாளர்கள் திருமுருகன், பிரபாகரன், ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com