நேரத்தை முறையாக கடைபிடிக்காவிட்டால் அரசு பஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரத்தை முறையாக கடைபிடிக்காவிட்டால் அரசு பஸ் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
Published on

சென்னை,

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஏ.சி. மற்றும் ஏ.சி. வசதி அல்லாத பஸ்கள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் என சுமார் 1,200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவு பஸ்களின் நேர விரயம் காரணமாக அரசு பஸ்களில் பயணிப்பதைவிட ஆம்னி பஸ்களில் பயணிக்கவே பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

உதாரணமாக நாகர்கோவிலில் இருந்து கோயம்பேட்டிற்கு ஆம்னி பஸ்கள் 11 மணி நேரத்தில் இயக்கப்படுகிறது என்றால், அரசு விரைவு பஸ்கள் நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு 12 மணி நேரத்தில் இயக்கப்படுகிறது. இந்த அரசு பஸ் கோயம்பேடு செல்வதாக இருந்தால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கூடுதலாக 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதற்கு அரசு விரைவு பஸ்களை இயக்கும் டிரைவர்களே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, அந்த பஸ் டிரைவர்கள் தங்கள் கிளை மேலாளர்கள் டீசல் சிக்கனத்திற்காக பஸ்சை வேகமாக ஓட்டக்கூடாது என்று தெரிவித்து இருப்பதாக பயணிகளிடம் கூறி தங்கள் தவறுகளை சமாளிக்கின்றனர். இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

அரசு விரைவு பஸ்களை டீசல் மிச்சம் பிடிப்பதற்காக குறைவான வேகத்தில் ஓட்டுமாறு ஒருபோதும் அறிவுறுத்தவில்லை. அதே நேரத்தில் வேகமாக ஓட்டி விபத்துக்குள்ளாக்காமல் பாதுகாப்பான முறையில் இயக்கி உரிய காலத்தில் குறிப்பிட்ட இலக்கை வந்தடையும் வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என்றே டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர, அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தங்கள் பயண அனுபவம் குறித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான இணைப்பு (லிங்க்) ஒன்றும் அனுப்பப்படும். இந்த லிங்க் மூலம் பஸ்சின் காலதாமதம், சுத்தமின்மை, டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் நடைமுறைகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com