பயிர் கழிவுகளை எரிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை

பயிர் கழிவுகளை தங்களது விளைநிலங்களிலேயே எரித்து மண்ணை மலடாக்கும் செயல்களை விவசாயிகள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
பயிர் கழிவுகளை எரிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை: தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பயிர் கழிவுகளை அந்தந்த விளை நிலத்திலேயே எரிப்பதால் மண்ணில் உள்ள அனைத்து நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் அழிக்கப்பட்டு மண் வளம் குறையும், மண் மலடாகும் நிலைக்கு தள்ளப்படும். பயிர் கழிவுகள் எரிக்கப்படும்போது அதிகப்படியான கரி துகள்கள் வெளியேறி காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, புவி வெப்பமடைதலுக்கும் காரணமாகிறது. பயிர் கழிவுகளை எரிப்பதால் வெளியாகும் ரசாயனங்கள் மழைநீருடன் கலந்து நீர்நிலைகளையும் மாசுபடுத்துகின்றன. பயிர் கழிவுகளை எரிக்கும்போது அருகில் உள்ள புதர்கள் மற்றும் மரங்களுக்கும் தீ பரவி மற்ற மரங்கள் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பயிர் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை சுவாச பிரச்சினைகள், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் மற்றும் கண்நோய்கள் போன்ற பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

பயிர் கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். பயிர் கழிவுகளை மண்ணில் உழுது, அவற்றை மக்க வைத்தால் அவை மண் வளத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த உரமாகும். பயிர் கழிவுகளை எரிபொருளாக மாற்றி, மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம். பயிர் கழிவுகளை எரிக்காமல் இதுபோன்று முறையாக பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு லாபம் ஏற்படுவதுடன் மண் வளம் மேம்பட்டு நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழிவகுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறைந்து பசுமையான ஒரு மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மாறும்.

இதுபோன்று பயிர் கழிவுகளை தங்களது விளைநிலங்களிலேயே எரித்து மண்ணை மலடாக்கும் செயல்களை விவசாயிகள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. குடி பழக்கமுள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள் போன்றேர்களால் தெரிந்தோ தெரியாமலோ இது போன்ற காய்ந்த பயிர் கழிவுகள் மீது தீக்குச்சிகள் வீசப்பட்டு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டால் அது குற்றமாகவே கருதப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, தவறான நபர்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட ஆட்சியரகத்திற்கோ, வட்டார வருவாய் அலுவலகங்களுக்கோ தெரிவிக்க வேண்டும்.

இது போன்று பயிர்கழிவுகளை எரிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நமது வயல்களில் மண்வளத்தை பாதுகாத்து நாட்டையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com