

சென்னை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மாதம் 4-ந்தேதி -முதல் 11-ந்தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்தனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கியதையடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் வேலை நிறுத்தத்தை திரும்பப்பெறவேண்டும் என்று தொழிற்சங்கங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் 8 நாட்களுக்கு பிறகு வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு, பஸ் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். பஸ்களும் வழக்கம்போல் ஓடத்தொடங்கின.
இந்தநிலையில், வேலை நிறுத்த போராட்டத்தின்போது, பணிக்கு வராத தொழிலாளர்களின் ஊதியத்தை போக்குவரத்துக்கழகம் அதிரடியாக பிடித்தம் செய்துள்ளது.
கடந்த மாதம் 5ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலான 7 நாட்களுக்கு வேலை நிறுத்த காலத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் இருந்து சம்பளம் பிடித்ததாக கூறப்படுகிறது.