

சென்னை,
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியலின்படி, ஆன்லைன் அல்லது நேரடியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை தொடங்க என்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னரே சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டையும் பின்பற்ற வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.