ஆசிரியர்கள் திட்டியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம்

இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
உறவினர்கள் போராட்டம்
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் திட்டியதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள குறத்தியறை கீரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் தாமஸ். இவருடைய மனைவி லென்சி. இவர்களுடைய மகன் கவின் ஜெனில் (வயது 16). நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில், விக்டர் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரத்தினபுரம் வடக்கு தெருவுக்கு குடிபெயர்ந்தனர். நேற்று முன்தினம் விக்டர் தாமஸ் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிலையில், கவின் ஜெனில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். மேலும் அவனது தாயாரும் வீட்டில் இல்லை. வீட்டின் முன்பக்கக் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டுப் பாட்டியிடம் வெளியே செல்வதாகக்கூறிச் சென்றவன், சிறிது நேரத்தில் பின்பக்க வழியாக மீண்டும் உள்ளே வந்துள்ளான். அங்கு திடீரென அவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.

அதிர்ச்சியடைந்த பாட்டி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை

இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, வகுப்பில் மாணவி ஒருவருடன் சிரித்துப் பேசியதற்காக ஆசிரியர்கள் தனது மகனைக் கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே அவன் தற்கொலை செய்துகொண்டதாகவும் தாயார் லென்சி பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போராட்டம்

இதற்கிடையே கவின் ஜெனிலின் தற்கொலையை அறிந்த சக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துச்சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வாயிலில் உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திடீர் மறியலில் ஈடுபட்டு, மாணவனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப்பெற மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனங்களில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com