பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

திருவள்ளூர் அருகே பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
Published on

திருவள்ளூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனிதா (வயது 17). திருவள்ளூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அனிதா 600-க்கு 435 மதிப்பெண்கள் பெற்றார். தான் நன்றாக படித்து தேர்வு எழுதிய நிலையில் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்ததாக கூறி மாணவி அனிதா மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் மாணவிக்கு அறுதல் கூறி கல்லூரி படிப்பை தொடர அறிவுரை கூறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அனிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்கியபடி கிடந்ததை கண்டு கதறி துடித்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் தாலுகா போலீசார் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com