பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை: தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் கைது

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆர்.எஸ். புரம் பகுதி யில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிவந்த மிதுன் சக்ரவர்த்தி (வயது 31), அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை. வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் மாணவி கூறி உள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேர்த்தனர். ஆனாலும் ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் கட்ட விசாரணையில் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மாணவி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரிய வந்தது. மாணவியின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ்-அப்பில் ஆபாசமான முறையில் பேசியதற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அதை விசாரித்த நீதிபதி ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தியை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்த சூழலில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெயர் நேற்று சேர்க்கப்பட்டது. அவர் மீது போக்சோ சட்டப்பிரிவு 21-ன் கீழ் (புகார் அல்லது வழக்கு பதிவு செய்ய தவறியதற்காக தண்டனை) வழக்கு பதிவு செய்யப்பட் டது. இதற்கிடையே பள்ளி முதல்வர் மீராஜாக்சன் தலைமறைவானார். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தேடப்பட்டுவந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com