மின்கம்பத்தை தொட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஜெயசந்திரன் நேற்று இரவு தனது நண்பரான யுவராஜ் என்பவருடன் வெளியே சென்றுள்ளார்.
மின்கம்பத்தை தொட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஜெயசந்திரன்
Published on

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் சாலையில் இருந்த மின்கம்பத்தில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில், கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் உலுக்கியுள்ளது.

யார் இந்த ஜெயசந்திரன்?

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த். இவருடைய 18 வயது மகன் ஜெயசந்திரன், சென்னை நந்தனம் கலை கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். படிப்பிற்காக சென்னை வந்த இவர், மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் உள்ள அரசு மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

நள்ளிரவில் நடந்த விபரீதம்

ஜெயசந்திரன் நேற்று இரவு தனது நண்பரான யுவராஜ் என்பவருடன் வெளியே சென்றுள்ளார். பின்னர், இன்று அதிகாலை வேளையில் விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். விடுதிக்கு அருகே வந்தபோது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை ஜெயசந்திரன் தாண்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த மின்கம்பத்தில் அவரது கை பட்டுள்ளது. அடுத்த சில நொடிகள்.. யாரும் சற்றும் எதிர்பாராத அந்த விபரீதம் நிகழ்ந்தது

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சோகம்

மின்கம்பத்தில் ஏற்கனவே இருந்த மின்கசிவு காரணமாக, ஜெயசந்திரன் மீது பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து துடித்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினரும் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து ஜெயசந்திரனை மீட்டனர். உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெயசந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சியளித்தனர்.

போலீசார் தீவிர விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நந்தனம் கல்லூரியில் படித்து வந்த இளம் மாணவர் ஒருவர் அதிகாலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையேயும் கல்லூரி நண்பர்களிடையேயும் பெரும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com