ஜேடர்பாளையம் ஆற்றில் குளித்தபோது மாயமான கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு

ஜேடர்பாளையம் ஆற்றில் குளித்தபோது மாயமான கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
ஜேடர்பாளையம் ஆற்றில் குளித்தபோது மாயமான கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
Published on

பரமத்திவேலூர்:

பெங்களூரு சிங்காபுரம் லேஅவுட்டை சேர்ந்த பலராமன் மகன் ஸ்ரீதர் (வயது 20). கல்லூரி மாணவரான இவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவிற்காக தீர்த்தம் எடுப்பதற்காக நேற்று முன்தினம் ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தார். அப்போது படுகை அணை காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்தபோது ஸ்ரீதர் மாயமானார்.

இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், நாமக்கல் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து காணாமல் போன கல்லூரி மாணவரை தேடினர். பின்னர் இரவு நேரமானதால் தேடுதல் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் மூலம் ராஜாவாய்க்காலில் மாணவரை தேடினர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ராஜாவாய்க்காலின் படித்துறை கீழ் மாணவர் ஸ்ரீதரை பிணமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பேலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com