471 மதிப்பெண்கள் எடுத்தும் அரசு மாதிரி பள்ளியில் இடம் கிடக்காததால் மாணவி வேதனை

மாணவி தரப்பில், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
471 மதிப்பெண்கள் எடுத்தும் அரசு மாதிரி பள்ளியில் இடம் கிடக்காததால் மாணவி வேதனை
Published on

திருவாரூர்,

பள்ளி அளவில் முதலிடம்

திருவாரூர் அருகே தொழுவனங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவருடைய மகள் தர்ஷினி. இவர் திருவாரூர் மடப்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து இந்த ஆண்டு நடந்த அரசு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதல் இடம் பெற்றார். இது மட்டுமில்லாமல் தேசிய திறனாய்வு தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து மாணவி தர்ஷினி பிளஸ்-1 படிக்க திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் மாணவி தர்ஷினிக்கு அரசு மாதிரி பள்ளியில் படிக்க இடம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மாணவி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3 முறை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படு கிறது. இதுகுறித்து மாணவி தரப்பில், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிய நிலையில் திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தால் அந்த மாணவியின் மனு நிராகரிக்கப்பட்டது என தெரிகிறது.

மாணவி வேதனை

மாணவி தர்ஷினியை விட குறைவாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அரசு மாதிரி பள்ளியில் இடம் கிடைத்த நிலையில், முதல் மதிப்பெண் பெற்ற தனக்கு இடம் கிடைக்காத காரணத்தினால் மாணவியும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்த மாணவி தர்ஷினி தற்போது அரசுமாதிரி பள்ளியில் இடம் கிடைக்குமா? அல்லது வேறு பள்ளியில் படிக்க வேண்டுமா? என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.

கலெக்டரிடம் மனு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற எனக்கு மாதிரி பள்ளியில் படிக்க இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவி தர்ஷினி, அவருடைய தந்தையுடன் வந்து கலெக்டர் மோகனச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத் தில் கேட்ட போது அரசு விதிமுறைகள் படி தான் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com