மாணவி ஸ்ரீமதி மரணம்: 5 பேர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் - இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
மாணவி ஸ்ரீமதி மரணம்: 5 பேர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் - இன்று விசாரணை
Published on

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மேலும் இவ்வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஒரு நாள் காவலில் எடுத்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். சுமார் 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் 5 பேரையும் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதியின் முகாம் அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி புஷ்பராணியின் உத்தரவின்பேரில் அவர்கள் 5 பேரும் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி வக்கீல் ராமச்சந்திரன் மூலமாகவும், பள்ளி முதல்வர் சிவசங்கரன் தனக்கு ஜாமீன் கேட்டு வக்கீல் சீனிவாசன் மூலமாகவும் தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி (பொறுப்பு) சாந்தி, இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும் என்றார். அதன்படி அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com