

சென்னை,
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளத்தில் காலை 8.45 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது வழக்கமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வது வழக்கமாகும்.
இருப்பினும் தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சுதந்திர போராட்ட தியாகிகள் வயது மூப்பின் காரணமாக் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர்கள் அவர்களுக்கு பொன்னாடை வழங்கி கவுரவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகளின் போது மாற்றித் திறனாளி மாணவர்களுக்கு முதலமைச்சர் இனிப்புகள் வழங்குவது வழக்கமாகும். இந்த ஆண்டு அதற்கு பதிலாக அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு நேரில் சென்று மாவட்ட நிர்வாகம் சார்பில் இனிப்புகள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கி முதலமைச்சர் கவுரவிக்கிறார்.