நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நெல்லையில் போராடிய மாணவர்கள் கைது

நெல்லை வண்ணார்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர், மாவட்ட செயலாளர் ஷைலேஷ் அருள்ராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நெல்லையில் மாணவர்கள் போராட்டம்
Published on

நெல்லை,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நெல்லையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சென்னையிலும் மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் ஷைலேஷ் அருள்ராஜ் தலைமையில் நேற்று காலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காததால் மாணவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மாணவர்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

குண்டுக்கட்டாக கைது

தொடர்ந்து தடையை மீறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். சிலரை சாலையில் தரதரவென இழுத்து சென்று போலீசார் வாகனங்களில் ஏற்றினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com