இஸ்ரோ விஞ்ஞானியுடன் மாணவர்கள் சந்திப்பு

இஸ்ரோ விஞ்ஞானியுடன் மாணவர்கள் சந்தித்தனர்.
இஸ்ரோ விஞ்ஞானியுடன் மாணவர்கள் சந்திப்பு
Published on

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மாணவர்கள் மத்தியில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட மைய நூலக கூட்டரங்கில் கோடை அறிவியல் திருவிழா நடத்தியது. தொடக்க விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் அசோக் மற்றும் நடராசன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். காஞ்சீபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வு பெற்ற முதல்வர் சிவக்குமார் விழாவை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணை தலைவர் மாணிக்கத்தாய் வாழ்த்தி பேசினார். முடிவில் மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகர் தனலட்சுமி நன்றி கூறினார்.

விழாவில், விஞ்ஞானி சந்திப்பு நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானி எட்வின்.ஆர்.புரவுன் கலந்து கொண்டு விண்வெளி, சூரிய குடும்பம், கோள்கள், ஏவுகணையின் அமைப்பு, செயல்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக எளிய அறிவியல் பரிசோதனை, வானவியல் செயல்பாடுகள், கலையும், அறிவியலும் ஆகியவை நடத்தப்பட்டது. நிறைவு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை இயக்குனர் மற்றும் துறைத்தலைவர் மணிமேகலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் சுகுமாரன் நிறைவுரையாற்றினார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இல்லம் தேடிக்கல்வித்திட்ட தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com