குன்றத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம்

குன்றத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் நுழைவாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்றத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம்
Published on

குன்றத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று வழக்கமாக கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் கூறுகையில், கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க போதிய பேராசிரியர்கள் இல்லை எனவும், கல்லூரியில் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் முறையாக இல்லாமல் இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும், இது குறித்து பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com