

சென்னை,
தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை அறிவித்தது. இந்த கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் ஆற்காடு சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் சுமார் 1,000 பேர் நேற்று செய்யாறு- ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று காலை ஓட்டேரி ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் சென்று போராட்டம் நடத்தினார்கள்.
காட்பாடி சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் வேலூர்- காட்பாடி ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மறியலை கைவிடும்படி போலீசார் கூறினர். ஆனால் மாணவர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து 100 மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் உள்ள குறிஞ்சி கல்லூரி மாணவ-மாணவிகள் திருச்சி- கரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 4 மாணவிகள் உள்பட 76 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அரசு இசைக்கல்லூரி மற்றும் பசுமை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவ-மாணவிகள் 3 ஆயிரம் பேர் மதுரை பசுமலை பஸ் நிறுத்தத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் மாணவர்கள் மறியலை கைவிட மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மாணவ-மாணவிகள் மீது தடியடி நடத்தினர். இதனால் மாணவர்கள் சிதறியடித்து ஓடினார்கள். இதற்கிடையே அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்கள் மற்றும் அரசு ஜீப் மீது சிலர் கல்வீசி தாக்கினார்கள். போராட்டம் தொடர்பாக 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை, நெல்லை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் முறைசாரா தொழிலாளர் அமைப்பின் மாவட்ட செயலாளர் அனில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.