அரசுப் பேருந்தில் மாணவர்கள் சேட்டை: பொதுமக்கள் அதிர்ச்சி

மாணவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேருந்தின் வெளிப்பகுதியில் சாகசம் செய்வது போல படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர்.
ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்கள்
பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்கள்
Published on

கிருஷ்ணகிரி,

ஓசூர் அருகே அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படிக்கட்டில் தொங்கியபடி சாகசம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி தாலுகா பகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகள் மூலம் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை வழக்கம்போல் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றில், பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தின் படியில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேருந்தின் வெளிப்பகுதியில் சாகசம் செய்வது போல மாணவர்கள் நடந்து கொண்ட இந்த வீடியோ, பின்னால் வந்த வாகன ஓட்டிகளால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

பெற்றோர்கள்-பொதுமக்கள் அதிர்ச்சி

சிறு விபத்து ஏற்பட்டாலும் மாணவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய இந்த செயலைக் கண்டு சக பயணிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

கிராமப்புறப் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் போதிய எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததே இது போன்ற கூட்ட நெரிசலுக்கும் ஆபத்தான பயணங்களுக்கும் முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் மீது போக்குவரத்து போலீசாரும் பள்ளி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com