என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடக்கம்

என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. இதற்கு 9 ஆயிரத்து 455 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 17-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவு, அதற்கடுத்ததாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. தமிழகத்தில் உள்ள 440 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவில், 89 ஆயிரத்து 187 இடங்கள் நிரம்பி இருந்தன. இதையடுத்து மீதம் உள்ள இடங்களை நிரப்புவதற்கு துணை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 20-ந்தேதி (நேற்று) முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவித்து இருந்தநிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கலந்தாய்வுக்கு 9 ஆயிரத்து 455 மாணவ- மாணவிகள் விண்ணப்பப்பதிவு செய்திருக்கின்றனர்.

அதன்படி, என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுவதோடு, கலந்தாய்வும் இன்றே தொடங்க இருக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (சனிக்கிழமை) தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். அதனை அன்றைய தினமே உறுதி செய்வதற்கும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இறுதியாக 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இறுதி ஒதுக்கீட்டு ஆணையுடன் துணை கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com