

சென்னை,
தமிழகம், குஜராத், டெல்லி, மராட்டியம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் சுபிக்ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்பிரமணியன்.
இவர், விஸ்வபிரியா என்ற பெயரில் நிதி நிறுவனங்களும் நடத்தி வந்தார். இந்த நிறுவனங்களின் மூலம், பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.150 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக சுப்பிரமணியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறையில் அடைப்பு
மேலும், சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்காக வங்கிகளில் சுமார் ரூ.700 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சுப்பிரமணியன் மீது, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுப்பிரமணியன், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சுபாதேவி விசாரித்தார். அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் ஹேமா அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணை முடிவடையவில்லை என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.