

கோவை,
பிரதம மந்திரியின் வீடுகளுக்கான சூரிய மின் திட்டத்தில் விண்ணப்பம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் கோவை மின் பகிர்மான வட்டம் சார்பில் வரதராஜபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. முகாமிற்கு மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி தலைமை தாங்கினார். இதில் ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் பிந்து மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த திட்டத்தில் 1 கிலோ வாட்டுக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம் மற்றும் 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும். சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியம் செலுத்தப்படும்.
1 கிலோவாட் சோலார்பேனல் ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீட்டை உடனடியாக திரும்ப பெறலாம். கோவை மாவட்டத்தில் 9 ஆயிரம் குடும்பங்கள் சூரிய ஒளி மின் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் registration.pmsuryaghar.gov.in, www.pmsuryaghar.gov.in செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.