விடுதிகளில் பட்டியலின மாணவிகளுக்கு தரமற்ற உணவு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பட்டியலின மக்களின் நலனில் திமுக சிறிதும் அக்கறைக்காட்டவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விடுதிகளில் பட்டியலின மாணவிகளுக்கு தரமற்ற உணவு - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

புதுக்கோட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமூகநீதி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த இரு மாதங்களாக மூன்று வேளையும் வெறும் சோறும், ஊறுகாயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், தங்களுக்கு குறைந்தபட்சம் உண்ணத் தகுந்த உணவு வழங்க வேண்டும் என்று கோரி அந்த விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள் கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருவதாகவும் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பட்டியலின மாணவிகளுக்கு உணவு வழங்குவதற்கு கூட துப்பில்லாத நிலையில் திமுக அரசு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை சமூகநீதி விடுதிக்கு மாணவிகளின் உணவுக்காக வழங்கப்படும் நிதி கடந்த திசம்பர் மாதத்திற்கு பிறகு வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் அரிசி, எரிவாயு சிலிண்டர் ஆகியவை மட்டுமே இருப்பதால் அதைக் கொண்டு, கடந்த இரு மாதங்களாக வெறும் சோறு மட்டும் வடித்து தங்கள் சொந்த செலவில் ஊறுகாய் அல்லது சிப்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் விடுதி பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.

விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புரதச் சத்து, காய்கறிகள் என சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி மாதத்தில் 4 நாள்கள் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. காய்கறிகள் வாங்கி பருப்பு குழம்பு வைத்து மாணவ, மாணவியருக்கு பரிமாறுவதற்கு கூட நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் தான் பட்டியலின மாணவிகளுக்கு வெறும் சோறு மட்டுமே வழங்கப்படும் அவலம் நிலவுகிறது.

புதுக்கோட்டை சமூகநீதி விடுதியில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1,331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஒரு மாதத்திற்கு உணவு வழங்குவதற்காக ரூ.1,500, அதாவது தினமும் ரூ.50 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதிலும் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகாரத்தில் இருப்பவர்களால் சுரண்டப்படுகிறது. இந்தத் தொகை சுமாரான உணவு வழங்குவதற்கே போதுமானதல்ல என்று கூறப்படும் நிலையில், அது கூட வழங்கப்படாவிட்டால் பட்டியலின மாணவ, மாணவியருக்கு எவ்வாறு உணவு வழங்க முடியும்? என்பதை விடியா அரசு தான் விளக்க வேண்டும்.

பட்டியலின மாணவ, மாணவியர் விடுதிக்கு நிதி ஒதுக்காத கொடுமை இப்போது தான் நடைபெறும் ஒன்றல்ல. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களின் நலனில் சிறிதும் அக்கறைக்காட்டவில்லை.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு 4 மாதங்களுக்கும் மேலாக உணவுப்படி வழங்கப்படவில்லை. அதனால், அதன் வார்டனாக பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர் மகேந்திரன் என்பவர் சொந்தக் காசை செலவழித்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வந்தார். நிலுவையில் உள்ள உணவுப்படியை வழங்கும்படி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் அவர்கள் பணம் ஒதுக்கீடு செய்யாததாலும், தம்மை மீண்டும் ஆசிரியர் பணிக்கே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணியாற்றும் பலரும் தங்களின் சொந்தப் பணத்தை செலவழித்து விட்டு, அது மீண்டும் கிடைக்குமா? என்ற மன உளைச்சலில் தான் உள்ளனர்.

திமுக ஆட்சியில் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக விடுதிகளின் பெயரை சமூகநீதி விடுதிகள் என்று பெயர்மாற்றம் செய்யும் வேலை மட்டும் தான் நடந்தது. ‘பேரு வச்சியே சோறு வச்சியா’ என்ற திரைப்பட அவல நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாகத் தான் திமுக ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சமூகநீதி நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமின்றி, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றன. வளர்ச்சியில் யாரையும் பின் தங்க விட மாட்டோம் என்று வசனமெல்லாம் பேசும் முதலமைச்சரின் ஆட்சியில், அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் சகிக்க முடியாதவையாக உள்ளன. "ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்பதைப் போலத் தான் திமுக ஆட்சியும் உள்ளது. அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com