எழும்பூரில் 5-ம் தேதி முதல் புறநகர் ரெயில் சேவை சீராகும்: அதிகாரிகள் தகவல்

ரெயில் இயக்க தொடங்குவதற்கான அனைத்து இறுதிகட்ட பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்றது.
எழும்பூரில் 5-ம் தேதி முதல் புறநகர் ரெயில் சேவை சீராகும்: அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மின்சார ரெயில் நடைமேடை 10, 11 ஆகியவற்றில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த பிப்ரவரி 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை 45 நாட்களுக்கு ரெயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளை குறிப்பிட்ட தேதிகளுக்குள் முடிக்கும் வகையில், 600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாகப் பணியமர்த்தபட்டனர்.

30 ஜே.சி.பி., 8 நவீன எந்திரங்கள், 3 கிரேன் மற்றும் கான்கிரீட் கலவை எந்திரங்கள் உதவியுடன் பார்சல் எடுத்து செல்வதற்கான நடைமேம்பாளத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 72 மீட்டர் அகலம், 25 மீட்டர் உயரம் கொண்ட பார்சல் நடைமேம்பாலம் அமைக்க அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, தண்டவாளங்கள் மறுசீரமைப்பு, நடைமேடையில் கூடுதல் வசதி போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

ரெயில் இயக்க தொடங்குவதற்கான அனைத்து இறுதிகட்ட பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்றது. அதாவது, நடைமேடையை சுத்தம் செய்தல், நகரும் படிக்கட்டு இயக்கி பார்ப்பது, தண்டவாளங்க ளுக்கு கிரீஸ் தடவும் பணி, பயணிகள் அறிவிப்பு பலகை அமைப்பது, மின் அழுத்த வயர்களை சரிசெய்தல் உள்பட அனைத்து பணிகளும் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பால அடித்தளப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் வரும் 5-ம் தேதியில் இருந்து புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேம்பால பணிகள் காரணமாக 10 மற்றும் 11வது நடைமேடைகள் மூடப்பட்டு, தற்காலிக அட்டவணை மூலம் ரெயில்கள் இயக்கப்பட்டன. மேம்பாலத்தில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் இரவு நேரத்தில் நடைபெறும் எனவும், சாய்வு பாலம் அமைக்கும் பணிகள் அடுத்த 15 நாட்களில் நிறைவு பெறும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com