மக்களாட்சியை காக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

தன்னாட்சி அமைப்புகளை பாஜக தனது தனி அமைப்புகளாக மாற்றி வருகிறது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இருவரும் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து எம்.பி.க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டிலிருந்து தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.
அதன்படி அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னை வந்தார். இதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களான தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கும், எம்.பி.க்களுக்கும் விருந்து வைத்து ஆதரவை கோரினார்.
இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
“அரசியலமைப்பை பாதுகாக்கும் பணிக்கு சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார். சுதர்சன் ரெட்டி துணை ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர். தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் சுதர்சன் ரெட்டி. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அத்தனை பேரும் சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்கள். நமது அரசமைப்பு சட்டம் ஆபத்தில் சிக்கியுள்ளது. மக்களாட்சியை காக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும். ‘தமிழர்’ என்ற முகமூடி அணிந்து பாஜக ஆதரவு கேட்கிறது” என்று பேசினார்.






