பஸ்சில் இடம் பிடிப்பது தொடர்பாக மாணவர்களிடையே திடீர் மோதல்

உளுந்தூர்பேட்டையில் பஸ்சில் இடம் பிடிப்பது சம்பந்தமாக மாணவர்களுக்கிடையே நடந்த திடீர் மோதல் தொடர்பாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
பஸ்சில் இடம் பிடிப்பது தொடர்பாக மாணவர்களிடையே திடீர் மோதல்
Published on

உளுந்தூர்பேட்டை

அடிக்கடி சண்டை

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மாணவருக்கும் பள்ளிக்குச் செல்லும் போது பஸ்சில் இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகில் பஸ்சில் இடம் பிடிப்பது தொடர்பாக அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மாணவன் தனது நண்பர்களான மேலும் 5 மாணவர்களுடன் சேர்ந்து மங்கலம்பேட்டையை சேர்ந்த மாணவரை ஆபாசமாக திட்டி தாக்கிக்கொண்டிருந்தார்.

2 மாணவர்கள் கைது

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவரை தாக்கி கொண்டிருந்த மாணவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அவாகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 15 வயது 9-ம் வகுப்பு மாணவர், 16 வயது பிளஸ்-1 மாணவர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com