ஓடும் காரில் திடீர் தீ

புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓடும் காரில் திடீர் தீ
Published on

விழுப்புரம் மாவட்டம் களிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அவரது காரில் இன்று காலை புதுவைக்கு சொந்த வேலை காரணமாக வந்தார். அவருடன் காரில் 5 பெண்கள் வந்தனர்.

புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையம் குண்டு சாலை பகுதியில் கார் வந்தபோது முன்பக்கம் என்ஜின் பகுதியில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. உடனே ஏழுமலை காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, இறங்கினார். இதை பார்த்த காரில் இருந்த பெண்கள், அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி, அங்கிருந்து சற்று தொலைவிற்கு ஓடிச்சென்றனர். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊர்காவல் படை வீரர் திருவரசன் உடனடியாக அருகில் உள்ள கார் ஷோரூமில் இருந்த தீயணைப்பானை பயன்படுத்தி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.

இந்த விபத்தில் காரில் இருந்த 5 பெண்கள் உள்பட 6 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். ஊர்காவல் படை வீரரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com