

குடியாத்தம்,
25 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் டிரைவர், திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே தெக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 59), அரசு பஸ் டிரைவர். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது வெங்கடசாமி குடும்பத்துடன் வேலூர் காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் வசித்து வந்தார்.
இவரது மனைவி பேபி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வெங்கடசாமி நேற்று காலை 8 மணி அளவில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 25 பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் செல்லும் பஸ்சை ஓட்டிச் சென்றார். இறைவன்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் கண்டக்டராக இருந்தார்.
இந்த பஸ் குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் புதிய பைபாஸ் சாலையில் வந்தபோது வெங்கடசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாமர்த்தியமாக பஸ்சை வேகமாக இயக்காமல் மெதுவாக ஓட்டி வந்து சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மயங்கினார். இதனைப் பார்த்த பயணிகள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடசாமி பரிதாபமாக இறந்தார்.
பஸ்சில் வந்த பயணிகள் கூறுகையில், 25-க்கும் அதிகமான பயணிகள் இந்த பஸ்சில் வந்தோம். டிரைவர் வெங்கடசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தாறுமாறாக பஸ்சை ஓட்டி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். மேலும் கெங்கையம்மன் பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் விழும் அபாயமும் ஏற்பட்டிருக்கும். ஆனால் பயணிகளை காப்பாற்றும் நோக்கில் மிகவும் ஜாக்கிரதையுடன் பஸ்சை மெதுவாக இயக்கியபடி எங்களை பாதுகாப்பாக குடியாத்தம் நகருக்குள் கொண்டு வந்தார் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.